Wednesday, June 30, 2010

பன்றிக்காய்ச்சல் பீதி! இதிலும் ஆதிக்க மனப்பான்மை

பன்றிக்காய்ச்சல் பீதி
இதிலும் ஆதிக்க மனப்பான்மை
உலக மக்கள் தொகையில் குறிப்பிட்ட அளவு கூட இல்லாத அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் எந்த ஒரு பிரச்னை என்றாலும் உலகத்திற்கே வழிகாட்டியாக காட்டிக் கொண்டு பெரியண்ணன் வேலையில் ஈடுபடுவது வழக்கமான ஒன்று. ராணுவ மற்றும் பொருளாதார பலத்தால் முந்திச்செல்லும் இந்த நாடுகளின் உரித்தெடுத்த சுயநலம் பிரபலமானது. ஆங்கிலேயன் நம்மை ஆண்ட காலம் தொட்டு இன்று வரையிலும் ஐரோப்பிய இனத்திற்கு உள்ள இந்த உயர்வு மனப்பான்மை உலகத்தையே பாடாய் தான் படுத்துகிறது.
சமீபத்தில் செய்தி ஒன்றை படித்தேன். மேலே கூறியவற்றை மெய்ப்பிக்கும் வகையில் உள்ளது அந்த செய்தி. பன்றிக்காய்ச்சல் கடந்த ஒராண்டாக உலகம் முழுவதும் படாத பாடு படுத்திய நிலையில் அது தொடர்பாக ஏற்படுத்திய பீதி என்பது மிகவும் அதிகம் தான்.
முதலில் பாதிப்பை ஏற்படுத்தியது அமெரிக்காவில் என்பதாலும், போவது அமெரிக்க உயிர் என்பதாலும் அதற்கு மவுசு தானே! பன்றிக்காய்ச்சலை பொருத்தவரை பெரும் பாதிப்பு ஏற்பட்டு அமெரிக்காவில் அந்த நாட்டில் சுமார் 2 லட்சத்து 65 ஆயிரம் பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டனர். 12 ஆயிரம் பேர் பலியாயினர். 36 ஆயிரம் பேருக்கு சாதாரண அளவிலேயே பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருந்தது. இதுபோலவே பிரிட்டனில் பன்றிக்காய்ச்சலால் 65 ஆயிரம் பேர் இறந்து விட்டதாக தகவல்கள் பரப்பப்பட்டன.
ஆனால் உண்மையில் அந்த நாட்டில் 360 பேர் மட்டுமே பன்றிக்காய்ச்சலுக்கு பலியாகினர் ஆனால் மேலை நாட்டினர் உயிர் என்பதால் பன்றிக்காய்ச்சல் தொடர்பாக அளவுக்கு மீறிய பீதியை அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் ஏற்படுத்தின. பன்றிக்காய்ச்சல் மட்டுமின்றி நோய் பரப்பும் எந்த ஒரு கிருமிகளும் ஆசிய, ஆப்ரிக்க நாடுகளில் இருந்து தான் பரவுவதாக அந்நாடுகள் ஆவேசப்பட்டன.
ஆசிய, ஆப்ரிக்க நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என தங்கள் குடி மக்களை கேட்டுக் கொண்டன. இதில் மேலை நாட்டினரின் ஆதிக்கம் நிறைந்த உலக சுகாதார அமைப்பும் இந்த பீதியை பெரிதாக ஊதியது. பாதிக்கப்படுவது மேலை நாட்டினர் என்பதால் பெரும் பீதியை ஏற்படுத்தி உலகம் முழுவதும் வசூல் செய்தது. பன்றிக்காய்ச்சல் நோய் ஒழிப்புக்காக பல கோடி ரூபாய் திரட்டப்பட்டு மேலை நாடுகளில் அவை பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
உலக சுகாதார அமைப்பின் பீதி காரணமாக பல நாடுகளும் பன்றிக்காய்ச்சலுக்காக தேவையற்ற முறையில் பல ஆயிரம் கோடி ரூபாயை செலவழித்தன. பாதிப்பு இருந்ததை விடவும் பல மடங்கு அதிகமாக பணமும், முக்கியத்துவமும் தரப்பட்டு விட்டது.
ஆனால் பன்றிக்காய்ச்சலின் பாதிப்பு இரண்டாவது சீசனில் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் அதிகம் இருந்தது. பன்றிக்காய்ச்சலுக்கு இந்தியாவிலும் கூட நூற்றுக்கணக்கானோர் பலியாயினர். இதன் தொடர்ச்சியாக இப்போதும் கூட பன்றிக்காய்ச்சலின் பாதிப்பு தெரியத் தொடங்கியுள்ளது. ஆனால் ஐரோப்பிய நாடுகள் இப்போது என்ன சொல்கிறது தெரியுமா?
கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பன்றிக்காய்ச்சல் பரவிய போது உலக சுகாதார அமைப்பு அளவுக்கு அதிகமாக பீதியை ஏற்படுத்தி இதற்காக தேவையற்ற முறையில் பல கோடி ரூபாயை செலவழிக்கச் செய்து விட்டதாக கூறியுள்ளன. பன்றிக்காய்ச்சல் என்றால் பீதி கொள்ள வேண்டாம் என்கிறது ஐரோப்பிய யூனியன். இந்த விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு, உலக நாடுகளிடையே அளவுக்கு அதிகமான பீதியை ஏற்படுத்தி விட்டதாக ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு கவுன்சில் கூறியுள்ளது.
பன்றிக்காய்ச்சல் பீதியால் தொழில் பாதிப்பும் ஏற்பட்டுள்ளதாகவும், பல நாடுகளில் தொழில் செய்பவர்கள் பயணம் மேற்கொள்ளாததால் இழப்பை சந்தித்துள்ளதாகவும் ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் கூறியுள்ளன. ஏனென்றால் இப்போது போவது ஆசிய மக்களின் உயிர் தானே! இதிலும் ஆதிக்க மனப்பான்மை தான் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு!

No comments:

Post a Comment