Wednesday, June 30, 2010

நாடு தான் ஏழை நாடு ! ஆனால் மக்களோ பணக்காரர்கள்!

இந்திய அரசின் பொருளாதாரத்தை வைத்து மட்டும் நமது நாடு வளர்ந்து வரும் நாடு என்று கூறலாம். ஆனால் நமது மக்களின் செல்வத்தை வைத்து பார்த்தால் உலகிலேயே பணக்காரர்களை கொண்ட நாடு நமது நாடு தான்!இந்தியாவில் உள்ள வசதி படைத்தவர்களில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேரின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு நாட்டின் தேசிய வருமானத்தில் மூன்றில் ஒரு பங்காக உயர்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன..
கடந்த 2008ம் ஆண்டு பொருளாதார மந்தநிலை உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்த போதிலும் இந்தியாவுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏறபடுத்த வில்லை. கடந்த 2008ம் ஆண்டு உலக நாடுகள் அனைத்தும் மந்தநிலையால் தவித்த போதும் இந்தியாவுக்கு அந்த பாதிப்பு ஏற்பட வில்லை. உலக வல்லரசு என தம்பட்டம் அடிக்கும் அமெரிக்காவே ஆடிபோனது. ஆனால் அந்த புயலை எளிதாக எதிர்கொண்டு தன்னை நிலை நிறுத்திக் கொண்டது இந்தியா.
நமது நாட்டின் இந்த உறுதிக்கு அரசு கொஞ்சமும் காரணமல்ல. மாறாக மக்கள் தான். மக்களின் மண், பண்பாடு சார்ந்த பொருளாதாரமும், வலுவான அடிப்படையும், வரவுக்குள் செலவு செய்யும் மனப்பான்மையும், இவை எல்லாவற்றையும் விட சேமிப்பு மனப்பான்மையும் தான் இந்தியாவை பொருளாதார மந்தநிலையில் இருந்து காப்பாற்றியது. இப்போதும் கரை சேர்த்துக் கொண்டு இருக்கிறது.
கடந்த 2008ம் ஆண்டு உலகம் முழுவதுமம் மந்தநிலையால் பாதிப்பு இருந்ததால் பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு கூட குறைந்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் பெரும் பணம் படைத்தவர்களாக வளம் வந்தவர்களின் சொத்து மதிப்பு பெருமளவு சரிந்து போனது. ஆனால் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் மட்டும் மந்தநிலையால் பாதிப்பு ஏற்பட வில்லை. மாறாக மந்தநிலை நிலவிய 2008ம் ஆண்டில் இந்தியர்களின் சொத்து மதிப்பு முந்தைய ஆண்டை விட 50% அதிகரித்துள்ளது.
ஒரு லட்சத்து 20 ஆயிரம் இந்தியர்களின் சொத்து மதிப்பு அந்நாட்டின் தேசிய வருமானத்தில் மூன்றில் ஒரு பங்காகும். அதாவது இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில்0.01% மட்டுமே உள்ள மக்களின் சொத்து மதிப்பு தேசிய வருமானத்தில் மூன்றில் ஒரு பங்காக உள்ளது. இதன் மொத்த மதிப்பு 15 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயாகும். ஒரு லட்சத்து 20ஆயிரம் இந்தியர்களில் ஒரு இந்தியரின் சராசரி சொத்து மதிப்பு 16.5 கோடி ரூபாயாகும்.
பொருளாதார மந்தநிலை உட்பட எந்த ஒரு பொருளாதார சுனாமியிலும் சிக்காமல் இந்தியர்களின் பொருளாதாரம் வளர்ந்து வருவதை ஐ.நா.,வின் சமீபத்திய அறிக்கையே சாட்சி. அந்த அறிக்கை கீழ்கண்டவாறு கூறுகிறது
இந்தியர்களை பொறுத்தவரை சொத்து சேர்க்கும் அளவிற்கு செலவு செய்வதில்லை, ஒட்டுமொத்தமாக சேர்க்கும் பணத்தில் குறிப்பிட்ட அளவு மட்டுமே அவர்கள் செலவு செய்கின்றனர். பல நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியர்களின் செலவு செய்யும் அளவு மிகக்குறைவாக உள்ளது. இந்தியர்கள் சொத்து சேர்ப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுகின்றனர்.
இதனால் அவர்கள் வசம் உள்ள சொத்தை கொண்டு பல ஆண்டுகளுக்கு அவர்களுக்கு தேவையான உணவு தேவையை ஈடு செய்ய முடியும். நகர்புற இந்தியர்களிடம் சற்று செலவு செய்யும் போக்கு காணப்படுகிறது. சராசரியாக நகர்புற இந்தியர் சேர்த்து வைத்துள் சொத்து மதிப்பை கொண்டு அவர் 2 ஆயிரத்து 238 ஆண்டுகளுக்கு தனது உணவு தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியும். அதேசமயம் கிராமப்பு இந்தியர் வைத்திருக்கும் சொத்தை கொண்டு அவர் 3 ஆயிரத்து 814 ஆண்டுகள் தனது உணவு தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியும்.
இவ்வாறு ஆச்சரியத்துடன் கூறுகிறது ஐ.நா அறிக்கை.
இதுமட்டுமின்றி வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் வாழ்க்கையும் ஆச்சரியமாக இருப்பதாக ஐ.நா கூறுகிறது. இந்தியாவில் வறுமையில் வாடும் மக்கள் கோடி கணக்கில் இருக்கின்றனர் சுமார் ஒரு கோடியே 36 லட்சம் இந்தியர்கள் வறுமை கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர். அவர்கள் ஒரு வேளை உணவுக்கு கூட கஷ்டப்படுகின்றனர். சரியான உணவு, கூட இல்லாமல் தங்கள் வாழ்க்கையை நடத்துகின்றனர்.
ஆனாலும் கூட அவர்களில் பலருக்கு சொந்த வீடு உள்ளது. குடிசையாக இருந்தாலும் சொந்த வீடும், ஏதோ கொஞ்சம் நிலமும் உள்ளது. செலவு செய்ய பணம் இல்லா விட்டாலும் கூட சொத்து இருக்கிறது. தங்களின் சொத்தை விற்று செலவு செய்ய அவர்கள் விரும்புதில்லை. சொத்தை சேமிப்பாகவே கருதுகின்றனர். சொத்தை பரம்பரை பரம்பரையாக அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்கின்றனர். இந்த சொத்து வாழையடி வாழையாக தொடர்கிறது என ஐ,நா ஆச்சரியம் தெரிவிக்கிறது.
உண்மை தான் கிராமப்புறத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் இந்தியனும் கூட சொத்து வைத்திருப்பதால் ஏழை இல்லை. மேலை நாட்டினரோ செலவு செய்ய பல லட்சம் சம்பாதித்த போதும்கூட மிஞ்சி இருப்பது கடன் தான் என்பதால் அவர்கள் ஏழைகள் தான். நுகர்வு கலாச்சாரத்தில் சிக்காததால் இந்தியர்கள் வலுவுடனேயே இரு க்கின்றனர். நமது பொருளாதார பலத்திற்கு காரணம் இது தான். ஒரு மந்தநிலை மட்டுமின்றி எத்தனை மந்தநிலை வந்தாலும் இந்தியர்களின் பொருளாதாரத்தை அசைக்க முடியாது. எனவே தான் நாடு வேண்டுமானால் ஏழையாக இருக்கலாம். ஆனால் மக்கள் பணக்கார்கள் தான்!

No comments:

Post a Comment