கல்வி முறையின் மாற்றத்தால் குழந்தைகள் பள்ளிக்கு கொண்டு செல்லும் புத்தக பையின் அளவு அதிகரித்து கொண்டே செல்கிறது. உயர் நிலை கல்வி வரும் வரை பள்ளி குழந்தைகளுக்கு குறிப்பிட்ட பாடப்பிரிவு மட்டுமே இருக்கும். ஆனால் தற்போது அதன் எண்ணிக்கை அதிகரித்து கொண்ட செல்கிறது. சுற்றுச்சூழல், கம்ப்யூட்டர் உட்பட பல பாடங்களும் கூட தொடக்க கல்வியிலேயே இடம் பெற்று விட்டது. இவ்வாறு பாடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அதுதொடர்பான புத்தகங்களும், நோட்டு புத்தகங்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
சாதாரணமாக ஒரு ஆரம்ப கல்வி கற்கும் ஒரு குழந்தை 20 முதல் 25 பாட புத்தங்களையும், 25க்கும் மேற்பட்ட நோட்டு புத்தகங்களையும் அன்றாடம் பள்ளிகளுக்கு கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அளவுக்கு அதிமான எடை கொண்ட பாடப்புத்தகங்களை கொண்டு செல்லும் மாணவ- மாணவியர்களுக்கு பாதிப்பு ஏற்படுவது தொடர்பாக ஏற்கனவே பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாட புத்தகங்களை தூக்கிச் செல்லும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பாக மருத்துவ ரீதியாக சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றுள்ளது. கர்நாடக மாநிலம் கஸ்தூரி பா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்தியுள்ள இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், குழந்தைகள் கொண்டு செல்லும் பாட புத்தக சுமை குழந்தையின் மொத்த எடையில் 5 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருந்தால் அது கால் எலும்பு மற்றும் தண்டு வடத்தை பாதிக்கும்.
அதாவது 30 கிலோ எடை கொண்ட குழந்தை ஒன்று 2 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட பாட சுமையை எடுத்துச் செல்லவது அதற்கு பாதிப்பையே ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோலவே, குழந்தையின் மொத்த எடையில் இருந்து 15 சதவிகிதத்திற்கும் அதிகமாக புத்தக சுமை இருந்தால் குழந்தையின் தலை முதல் கால் வரை அனைத்து பாகங்களுமே பாதிக்கப்படும்.
அனைத்து எலும்பு இணைப்புகளிலும் வலி ஏற்படும், நாளடைவில் அந்த பாகங்கள் அனைத்தும் தேய்ந்து பிற்காலத்தில் பெரும் பாதிப்பை அந்த குழந்தைகள் சந்திக்க நேரிடும். குழந்தையின் நிமிர்ந்த நடையும், உடல் அமைப்பும் கூட பாதிக்கப்பட்டு விடும்.சிறு வயதிலேயே சுமக்கும் இந்த எடை அந்த குழந்தைகளுக்கு பிற்காலத்தில் பெரிய அளவில் பாதிப்பையே ஏற்படுத்தும் என அந்த ஆய்வு எச்சரித்துள்ளது. .
No comments:
Post a Comment