மனிதனின் பல பருவங்களில் பள்ளி பருவம் என்பது ஒவ்வொருவருக்கும் அடித்தளம் போன்றது. இதனால் தான் குழந்தைகள் குறிப்பிட்ட வயது வந்தவுடன் பள்ளிக்கு செல்லத் தொடங்குவது என்பது வாழ்க்கையின் முதல் அடியாகவே கருதப்படுகிறது. பள்ளிகளில் வெறும் கல்வி மற்றுமல்லாது ஒழக்கம், நடைமுறை பிரச்னை, சீரான பண்பாடு, சேர்ந்து வாழும் பண்பு, சமூகம் என்ற பரந்து விரிந்த கண்ணோட்டம் இவை அனைத்தையும் குழந்தைகளிடம் வளர்க்கும் பயிற்சி பட்டறையாகவே பள்ளிகள் விளங்குகின்றன.
வீட்டில் சுமார் 3வயது வரை இருந்து விட்டு பள்ளி என்ற புதிய அனுபவத்தை ரூசிக்கவும்,அனுபவிக்கவும், அதனை ஏற்றுக்கொள்ளவும் குழந்தைகளுக்கு உடனடியாக மனநிலை ஏற்படாது. இதனை ஏற்றுக்கொள்ள குழந்தைகளின் மன நிலைக்கு சில காலம் ஆகலாம். ஒரு சில குழந்தைகள் இதனை சில நாட்களில் ஏற்றுக் கொள்ளக்கூடும். வேறு சில குழந்தைகளோ சில மாதங்களில் தான் ஏற்றுக் கொள்ளும். பள்ளியின் ஒழுங்கும், சக தோழர்களின் அன்பும், வகுப்பறை என்ற கட்டுப்பாடும், ஆசிரியர்களின் வழிகாட்டுதலும் பிடித்து விட்டால் அதனை குழந்தைகள் ஏற்றுக்கொள்ளும் அதற்கான காலம் வரும் வரை குழந்தைகள் பள்ளி செல்ல அடம் பிடிக்கும். வீட்டுச்சூழ்நிலையில் இருந்து பள்ளிச் சூழ்நிலைக்கு மாறும் வரை மட்டுமே இந்த பிரச்னை இருக்கும்.
எனினும் ஒரு சில ஆண்டுகள் வழக்கமாக பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் திடீரென பள்ளிக்குச் செல்லாமல் அடம் பிடிக்கும். சில நாட்கள் பள்ளிக்குச் செல்லும், சில நாட்கள் பள்ளிக்குச் செல்லாது. இதுமட்டுமின்றி வாரத்தில் ஒரு சில நாட்கள் மட்டுமே பள்ளிக்கு செல்லும். நல்ல மனிநிலை இருந்தால் மட்டுமே பள்ளிக்குச் செல்லும். பள்ளிக்கு செல்ல முடியாது என அடம் பிடிக்கும். பள்ளிக்கு சென்று கொண்டிருந்த குழந்தைகளுக்கு திடீரென பள்ளியே கசந்து போய் விடும்.
குழந்தைகள் படிக்க மனமில்லாமல், விளையாட்டின் மீது கவனம் செலுத்துவதாலும், சோம்பேறித்தனத்தாலும் இதுபோன்று நடந்து கொள்வதாக பெரும்பாலான பெற்றோர்கள் கருதுகின்றனர். ஆனால் குழந்தைகள் பள்ளிக்குச்செல்ல மனமில்லாமல் நடந்து கொள்வதற்கு பல காரணங்கள் இருப்பதாக கல்வி சார்ந்த உளவியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பொதுவாக பள்ளியில் கற்று தரும் பாடத்தை கற்றுக் கொள்ள முடியாதநிலையில் குழந்தைகள் இருக்கலாம். இதற்கு பல காரணங்கள் உள்ளன. புரிந்து கொள்ள முடியாதது, ஆர்வம் குறைவது.உரிய முறையில் கற்றுக் கொள்ள முடியாதது, தெரியாத காரணங்கள் என எத்தனையோ காரணங்கள் உள்ளன.
ஆங்கிலத்தில் இது டைசிலக்சியா என்று கூறப்படுகிறது. வழக்கமாக எந்த ஒரு குழந்தைக்கும் ஒரளவு கல்வி கற்க முடியாத அளவுக்கு நிலைமை இருக்கும். ஆனால் இதுவே 70% முதல் 80% வரை கற்க முடியாத சூழ்நிலை இருந்தால் அதுவே டைசிலக்சியா என அழைக்கப்படுகிறது.இதற்கு அடுத்தபடியாக பள்ளியில் சொல்லித்தரும் விஷயத்தை தங்கள் நோட்டு புத்தகங்களில் எழுத முடியாதசூழ்நிலை, அதனை புரிந்து கொண்டு எழுதுவதற்கு நேரம் போதாது.
கவனம் சிதறும் போது வேகமாக பணியாற்ற முடியாதது. இதனால் ஆசிரியர்களின் கண்டிப்பு போன்றவற்றால் பள்ளிக்குச் செல்ல குழந்தைகளுக்கு ஆர்வம் குறையாலம். ஒரு கட்டத்தில் பள்ளிக்கு செல்ல முடியாது என அடம் பிடிக்கலாம். இதற்கு அடுத்தபடியாக வீட்டில் நிலவும் சூழ்நிலையும் முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
வீட்டில் பெற்றோர் சண்டையிட்டு கொள்வது, குழந்தைகள் மீது பாசம் இல்லாமல் இருப்பது, அவர்கள் மீது பரிவும், கவனமும் இல்லாமல் போவது, அவர்கள் செய்யும் நல்ல விஷயங்களை தட்டிக் கொடுத்து பாராட்ட பெற்றோர்கள் முன்வராதது தனிமையில் வாழ்வது போன்று குழந்தைகள் உணர்வதுபோன்ற பல காரணங்கள் உள்ளன.இதுபோன்று குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகளை களைய பெற்றோர், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம் என மூன்று தரப்பினரும் அமர்ந்து பேசினால் பிரச்னை தீரும்.
பள்ளியிலும் சரி! வீட்டிலும் சரி குழந்தைகள் நடந்து கொள்ளும் விதம் குறித்து மூன்று தரப்பினரும் பகிர்ந்து கொள்வதன் மூலம் எளிதில் அந்த குழந்தையின் பிரச்னையை தீர்க்க முடியும் என கல்வித்துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதுமட்டுமின்றி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தை விடவும் குழந்தைகளின் நலனில் அதிகம் அக்கறை கொண்ட பெற்றோர்கள் இந்த பிரச்னையை தீர்க்க அதிக கவனம் கொடுத்து பணியாற்ற வேண்டும் என்றும் அவர்களுடன் கூடுதல் நேரத்தை பெற்றோர்கள் செலவிட்டால் குழந்தைகள் சந்திக்கும் எந்த ஒரு பிரச்னையையும் எளிதில் தீர்க்க முடியும்.
------------------------------------
அதிகம் செல்போன் பேசுபவர்களா?
உங்கள் காது டமார் தான்
அறிவியல் வளர்ச்சியின் அற்புதமான கண்டுபிடிப்பான தொலைபேசியின் புதிய அவதாரம் செல்போன்களாகும். செல்போன் இல்லாமல் எந்த ஒரு வேலையும் செய்ய முடியாது என்ற அளவிற்கு இன்று நிலைமை மாறியுள்ளது. உடன் யாராவது இருக்கிறார்களாக இல்லையா என்பதை விட செல்போன் இருப்பது அவசியமாகி போனது. கழிவறைக்கு கூட செல்போனுடன் செல்பவர்கள் இன்று அதிகம்.
எனினும் எந்த ஒரு தொழில்நுட்பத்தாலும், வசதி எந்தஅளவிற்கு இருக்கிறதோ அந்த அளவிற்கு பாதிப்பும் இருக்கவே செய்கிறது. அந்தவகையில் செல்போன்களை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு ஒலி அலைகளால் பெருமளவு பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒலி அலைகள் நேரடியாக மூளையை தாக்குவதால் அதன் செயல்பாடுகளும், வளர்ச்சியும் முடங்கிப்போவதாக கூறப்படுகிறது.
எனவே செல்போன் மூலம் பேசுவதை கூடிய அளவில் குறைத்துக் கொள்வது நல்லது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். குழந்தைகளுக்கு செல்போன்களை பழக்குவதும் பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர். கருவுற்ற பெண்கள் செல்போன்களை பயன்படுத்துவதால் அவர்களுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
செல்போன்களில் இருந்து வெளி வரும் ஒலி அலைகள் நேரடியாக மூளையைச் சென்று தாக்கவல்லது. அதுமட்டுமின்றி அந்த ஒலி அலைகள் கருவுற்றிக்கும் குழந்தைகளையும் பாதிப்படை செய்யும். குழந்தையின் வளர்ச்சி, அதன் மன அமைதி போன்றவை பாதிக்க வாய்ப்பு உள்ளது. செல்போன்களில் இருந்து வரும் கதிர்களால் மூளையில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. மூளையின் செயல்திறன் குறைவதால் மன வளர்ச்சி கூட பாதிக்கும் அபாயம் உள்ளது. அதுமட்டுமன்றி சிந்திக்கும் திறனும் பாதிப்படைய வாய்ப்புள்ளது.
செல்போன் டவர்களால் மனிதர்களுக்கு பெரும் கதிரியக்க பாதிப்புகள் ஏற்படுகின்றன. அந்த டவர்களை சுற்றியுள்ள சில கிலோ மீட்டர் தொலைவுக்கும் கூட கதிர்களின் வீச்சு உள்ளது. இதனால் தான் நகர்புறங்களில் குருவிகள் இனமே அழிந்து விட்டது.
குருவிகள் மட்டுமின்றி வேறு சில பறவை செல்போன்களால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முதன் முறையாக நாடுமுழுவதும் விரிவானஆய்வு ஒன்றை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் செல்போன்கள் பயன்படுத்துவதால் தனி மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து லண்டனில் இருந்து வெளியாகும் மருத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு என்ற இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், செல்போன்களின் பாதிப்பால் உலகம் முழுவதும் பலருக்கு காது பாதிப்பு ஏற்பட்டுள்ளது. செல்போன் பயன்படுத்துபவர்களில் 70% பேருக்கு சாதாரண அளவில் காது தொடர்பான பிரச்னைகள் ஏற்படுகின்றன. தொடர்ந்து 4 ஆண்டுகள் பயன்படுத்துபவர்களுக்கு காதில் சத்தம் கேட்டல், அவ்வப்போது வலி போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.
செல்போன்களை தொடர்ந்து பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களுக்கு சில பரிரிந்துரைகளும் அந்த இதழில் வெளியிடப்பட்டுள்ளது. செல்போன்களை ஒரே காதில் பயன்படுத்தாமல் மாற்றி, மாற்றி பயன்படுத்துவதன் மூலம் தொடர்ச்சியான பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியம். அதே போன்று தொடர்ச்சியாக சில மணிநேரங்கள் பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு கொஞ்சம் கொஞ்சமமாக பேசுவதன் மூலம் காது பாதிப்படைவதை தடுக்க முடியும் என்றும் அந்த இதழ் தெரிவித்துள்ளது.
---------------------------------
குழந்தைகள் எவ்வளவு
புத்தக சுமையை சுமக்கலாம்?
கல்வி முறையின் மாற்றத்தால் குழந்தைகள் பள்ளிக்கு கொண்டு செல்லும் புத்தக பையின் அளவு அதிகரித்து கொண்டே செல்கிறது. உயர் நிலை கல்வி வரும் வரை பள்ளி குழந்தைகளுக்கு குறிப்பிட்ட பாடப்பிரிவு மட்டுமே இருக்கும். ஆனால் தற்போது அதன் எண்ணிக்கை அதிகரித்து கொண்ட செல்கிறது. சுற்றுச்சூழல், கம்ப்யூட்டர் உட்பட பல பாடங்களும் கூட தொடக்க கல்வியிலேயே இடம் பெற்று விட்டது. இவ்வாறு பாடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அதுதொடர்பான புத்தகங்களும், நோட்டு புத்தகங்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
சாதாரணமாக ஒரு ஆரம்ப கல்வி கற்கும் ஒரு குழந்தை 20 முதல் 25 பாட புத்தங்களையும், 25க்கும் மேற்பட்ட நோட்டு புத்தகங்களையும் அன்றாடம் பள்ளிகளுக்கு கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அளவுக்கு அதிமான எடை கொண்ட பாடப்புத்தகங்களை கொண்டு செல்லும் மாணவ- மாணவியர்களுக்கு பாதிப்பு ஏற்படுவது தொடர்பாக ஏற்கனவே பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாட புத்தகங்களை தூக்கிச் செல்லும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பாக மருத்துவ ரீதியாக சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றுள்ளது. கர்நாடக மாநிலம் கஸ்தூரி பா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்தியுள்ள இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், குழந்தைகள் கொண்டு செல்லும் பாட புத்தக சுமை குழந்தையின் மொத்த எடையில் 5 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருந்தால் அது கால் எலும்பு மற்றும் தண்டு வடத்தை பாதிக்கும்.
அதாவது 30 கிலோ எடை கொண்ட குழந்தை ஒன்று 2 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட பாட சுமையை எடுத்துச் செல்லவது அதற்கு பாதிப்பையே ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோலவே, குழந்தையின் மொத்த எடையில் இருந்து 15 சதவிகிதத்திற்கும் அதிகமாக புத்தக சுமை இருந்தால் குழந்தையின் தலை முதல் கால் வரை அனைத்து பாகங்களுமே பாதிக்கப்படும்.
அனைத்து எலும்பு இணைப்புகளிலும் வலி ஏற்படும், நாளடைவில் அந்த பாகங்கள் அனைத்தும் தேய்ந்து பிற்காலத்தில் பெரும் பாதிப்பை அந்த குழந்தைகள் சந்திக்க நேரிடும். குழந்தையின் நிமிர்ந்த நடையும், உடல் அமைப்பும் கூட பாதிக்கப்பட்டு விடும்.சிறு வயதிலேயே சுமக்கும் இந்த எடை அந்த குழந்தைகளுக்கு பிற்காலத்தில் பெரிய அளவில் பாதிப்பையே ஏற்படுத்தும் என அந்த ஆய்வு எச்சரித்துள்ளது. .
------------------------------
பார்க்கிங் கட்டணம்
நம்ம ஊரில் தான் குறைவாம்!
வாகனம் வைத்திருக்கும் சென்னை வாசிகளை சலிப்படைய வைக்கும் விஷயம் பார்க்கிங் கட்டணம். குறிப்பாக கார் வைத்திருக்கும் சென்னை வாசிகள் பொது இடங்களில் வண்டியை நிறுத்த கொடுக்கும் கட்டணம் புலம்பச் செய்து வடும். ஆனால் வெளிநாடுகளை ஒப்பிட்டால் நம்ம ஊரில் தான் கட்டணம் குறைவாம்.
கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் வாகனங்களின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகியுள்ளது.டெல்லி, மும்பை, சென்øன், கோல்கட்டா போன்ற பெருநகரங்கள் மட்டுமின்றி பெங்களூர், ஐதராபாத், சண்டிகர், ஆமதாபாத், நொய்டா போன்ற பல நகரங்களிலும் வாகனங்களின் பெருக்கம் அதிகரித்துள்ளது. அதுவும் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உயர்ந்துள்ளது.
நகர்புறங்களில் வாகனங்களை நிறுத்துவது என்பது இன்று பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அடுக்குமாடி வீடுகள் தான் அதிகம் என்பதால் வாகனங்களை நிறுத்துவதற்காக பெரும் செலவு செய்து இடம் தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பொது இடங்களில் வாகனங்களை நிறுத்தவும் கட்டணங்களே வசூலிக்கப்படுகின்றன.
இந்த கட்டண விகிதங்களை பொறுத்தவரை பெரு நகரங்களில் மிக அதிகமாகவே உள்ளது. உலகம் முழவதும் பார்க்கிங் என அழைக்கப்படும் பொது இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கான கட்டணம் எவ்வளவு வசூலிக்கப்படுகிறது என்பது குறித்து சர்வதேச பார்க்கிங் கட்டண ஏஜென்சியான கொலாரிஸ் ஆய்வு நடத்தியுள்ளது.இந்நிறுவனம் நடத்தியுள்ள சர்வேயில் சில ஆச்சரியமான தகவல்கள் தெரிய வந்துள்ளன.
சர்வதேச அளவில் நடத்தப்பட்ட இந்த சர்வேயில் இந்தியாவில் இருந்து நான்கு நகரங்கள் மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த நான்கு நகரில் சென்னையில் தான் குறைவான பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுவதாக அந்த ஆய்வு கூறுகிறது. பெங்களூரில் மிக அதிகமாக ரூ. 70ம், டெல்லியில் ரூ. 60ம், மும்பையில் ரூ. 50ம், சென்னையில் ரூ. 45ம் சராசரியாக பார்க்கிங் கட்டணமாக வசூலிக்கப்படுவதாக அந்த ஆய்வு கூறுகிறது.
இதுமட்டுமின்றி உலகம் முழுவதும் முக்கிய நாடுகளில் முக்கிய வளர்ந்த நகரங்களை ஒப்பிட்டால் இந்தியாவில் தான் பார்க்கிங் கட்டணம் குறைவு என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. மேலை நாடுகளில் ஒரு நாளுக்கான பார்க்கிங் கட்டணம் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் 250 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் சராசரியாக ஒரு 60 ரூபாய் என்ற அளவில் தான் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
---------------------------------------
No comments:
Post a Comment